Sunday 31 December 2017

ஃபேஸ்புக்கும் வாட்ஸப்பும் நானும்



,விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடே’ என்ற கதையாக நிறைய வலைப்பதிவர்கள் இப்போது வலைப்பக்கம் எழுதுவது இல்லை. எல்லோரும் எங்கே போனார்கள் என்று தேடித் தேடிப் போனதில், பலரும் ஃபேஸ்புக் (Facebook) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) இரண்டிலும் சங்கமம் ஆகி இருப்பது தெரிந்தது. பலநாட்களாக இவற்றிலிருந்து ஒதுங்கியே இருந்த நானும், அங்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆவலில் அந்த கடலில் குதித்து மீண்டு விட்டேன். ஏற்கனவே நான் இதே பொருளில் எழுதி இருந்தாலும், அனுபவம் காரணமாக இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல்கள்.

                                                                                             
தன்விவரம் (PROFILE) இல்லாத நண்பர்கள்

எனது ஃபேஸ்புக்கில் பல நண்பர்கள் Friend Request கொடுக்கிறார்கள். தெரிந்த முகமாக இருக்கலாம் என்று தேடிப்பார்த்தால் அறிமுகமானவர்களாக இல்லை. சிலர் தங்களது முகமாக வேறொருவர் படத்தை  (தங்களுக்குப் பிடித்த கடவுள், தலைவர், நடிகர், நடிகை இன்னும் சிலர் பூக்களின் படத்தை) முகமூடியாக தங்கள் தன்விவரத்தில் (PROFILE) வைத்து இருக்கிறார்கள்

மேலும், அவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டாலும்  ஃபேஸ்புக்கில் Overview என்று பார்த்தால் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.

Friends – No Friends to show
Photos – Follow ………… to get her public posts in your News Feed
Work and Education - No workplaces to show - No schools to show
Places He's Lived - - No places to show
Family and Relationships - No relationship info to show

காலம் இருக்கும் இருப்பில், எனக்கு எந்த விதத்திலும் அறிமுகம் இல்லாத அல்லது தன்விவரம் (PROFILE) சரியாகச் சொல்லாத அல்லது ஒரு சில அடிப்படை விவரங்கள் கூட தர விரும்பாத - அன்பர்களின் Friend Request ஐ எவ்வாறு ஏற்றுக் கொள்வது அல்லது அல்லது அவர்களைத் தொடர்வது என்று தெரியவில்லை. எனவே நண்பர்களாக ஏற்றுக் கொண்டபின்பும் தன்விவரம் (PROFILE) இல்லாதவர்களையும் எனக்கு அறிமுகம் இல்லாதவர்களையும் மற்றும்  எனது ஃபேஸ்புக் கணக்கில் பெயருக்கு நண்பர்களாக இருப்பவர்களையும் நீக்கி விடுவது நல்லது என்று நினைக்கிறேன். ஆனாலும் அதேசமயம் இன்னொரு மனம் அவர்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்று தடுக்கிறது.

வாட்ஸ்அப் நண்பர்கள்

ஃபேஸ்புக் என்பது ஒருவிதமான மயக்கம் என்றால் வாட்ஸ்அப் என்பதும் ஒருவகை மேனியா எனலாம். இங்கு உள்ள ஒரே சவுகரியம் குழுவில் இருப்பவர்கள் அனைவரது செல்நம்பர்களைக் கொண்டு, அவர்களை இன்னார் என்று அடையாளம் காணுவது எளிது. 

ஆர்வக் கோளாறு காரணமாக திரும்பத் திரும்ப ஒரே தகவலையோ படத்தையோ அல்லது வீடியோ காட்சியையோ பதிவு செய்கிறார்கள். எனது பழைய ஆன்ட்ராய்டு போன் ஒன்று இவற்றாலேயே அடிக்கடி ஹேங்க் ஆகி விடும்; பாட்டரியும் சீக்கிரம் தீர்ந்து விடும். (இப்போது புதிய ஆன்ட்ராய்டு போன் வாங்கி விட்டேன்.)

“அன்புடையீர், தேவையில்லா செய்திகள், படங்கள், வீடியோக்கள் என்று திரும்பத் திரும்ப இங்கே பதியப்படுவதால் எனது செல்போனில் இவற்றை நீக்கவே நான் அதிக நேரத்தை தினமும் செலவிட வேண்டி இருக்கிறது. எனவே வெளியேறுகிறேன்.” என்று சொல்லிவிட்டு, நான் இணந்து இருந்த சில வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து வெளியேறி விட்டேன். எனினும், இப்போதும் தகவல் தொடர்புக்காக வாட்ஸ்அப் கணக்கை முடிக்காமல் தொடர்கின்றேன்.

பொதுவான அம்சங்கள்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இரண்டிலும் காப்பி பேஸ்ட் பதிவர்கள் ஆதிக்கம் அதிகம். நீங்கள் கஷ்டப்பட்டு எழுதும் தகவலோ அல்லது எடுக்கும் படமோ இன்னொருவர் பெயரில் அப்படியே மாற்றம் ஆகி விடுகிறது. ஒருமுறை, ஃபேஸ்புக்கில், ஒரு குழுவில், நான் எனது கேமராவில் எடுத்த புகைப்படத்தை இன்னொருவர் தான் முதன்முறையாக எடுத்தது போல், தனது பக்கத்தில் பதிந்து கொண்டார். இதுபோல் அடிக்கடி நிகழும். ( நான் என்னால் எடுக்கப்பட்ட படம்  தவிர, மற்றவர்களது  படங்களை இணைக்கும் போது  எங்கிருந்து எடுக்கப் பட்டவை என்பதனை சொல்லி விடுவது வழக்கம்) 

ஆனாலும் விழா அழைப்பிதழ்கள், கூட்ட நிகழ்ச்சிகள், இரங்கல் செய்திகள் என்று கருத்து பரிமாற்றம் செய்ய இரண்டு தளங்களுமே சிறப்பாக உதவுகின்றன. இதில் உள்ள ஒரே ஒரு சிரமம் பலர் இந்த இரண்டு சேவைச் செய்திகளையும் தாமதமாக படிக்கிறார்கள், அல்லது பார்ப்பதே இல்லை என்பதால் போனிலும் ஒருமுறை இந்த தகவல்களை சொல்லி விட வேண்டி இருக்கிறது.

பொதுவெளியில் தன்னை நடுநிலையாளராக காட்டிக் கொள்ளும் பலரை, இங்குள்ள பதிவுகள் மூலம், அவர்ளது ஒரு சார்பான கருத்துக்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் முக்கியமான, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சில புரட்சிகரமான குழுவினர், மற்ற பொதுவான குழுக்களிலும் ஊடுருவி, இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார்கள் என்பதுதான். இவர்களுடைய வேலை எந்த அரசாங்கமாக இருந்தாலும் எதிர்ப்பதுதான். எனவே இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் எதிர்கால நலன் கருதி கவனமாக இருப்பது நல்லது.

என்னதான் மாய்ந்து மாய்ந்து  எழுதினாலும், குறுஞ்செய்திகளை விரும்புவோரே இங்கு அதிகம் என்பதனால், நமது பதிவுகளை படிக்காமல் அப்பால் போவோர்களே அதிகம்.படிக்கிறார்களோ இல்லையோ லைக் போடுவோர்கள் அதிகம்.

ஏதேனும் ஒரு பதிவை மறுபார்வை பார்க்க வேண்டுமென்றால், இவ்விரண்டிலும் ரொம்பவே கஷ்டம். அதேசமயம், வலைத்தளத்தில் வாசகர்கள் அதிகம் வருவார்கள் என்பதோடு, பழைய பதிவுகளை உடனே பார்ப்பதும் எளிது
.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே ஃபேஸ்புக், வாட்ஸ்அப் குழுக்களில் இடம் பெற்று இருந்தாலும், நான் முதலிடம் தருவது வலைத்தளத்திற்கு மட்டுமே. 

தொடர்புடைய எனது பிற பதிவுகள்

ஃபேஸ்புக் என்றே சொல்வேன் http://tthamizhelango.blogspot.com/2015/07/blog-post.html
ஃபேஸ்புக்கை (Facebook) முகநூல் என்பது சரியா? http://tthamizhelango.blogspot.com/2015/11/facebook_4.html
வாட்ஸ்அப் குப்பைகள் http://tthamizhelango.blogspot.com/2016/06/blog-post_30.html

               அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு 2018 வாழ்த்துகள்

 
                (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)
 

51 comments:

  1. புரொபைல் படம் இல்லாததால் என்னை நீக்கிவிடாதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. சிரித்து விட்டேன். எல்லோரையும் அல்லது எல்லாவற்றையும் ஒரே தராசில் வைத்து நிறுத்து பார்க்க முடியாது அல்லவா? வழக்கம் போல் உங்களைத் தொடர்கின்றேன்.

      Delete
  2. வாட்ஸப் ஒரு மேனியா! 100% உண்மை. பலரும் இதில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அதிலும் எத்தனை குழுக்கள்! ஒரே செய்தியே பலமுறை வருகிறது - அதுவும் ஒரே நபரிடமிருந்து என்னும் போது BP எகிருகிறது. அதனாலேயே நான் இருந்த குழுக்களிலிருந்து விலகி இருக்கிறேன்.

    ஃபேஸ்புக் - பொதுவாக இங்கே எனது பதிவுக்கான லிங்க் தருவதோடு சரி. நிறைய தேவையில்லாத கருத்துகள், விவாதங்கள் மட்டுமே இங்கே.

    நமக்கு வலைப்பூ மட்டும் போதும்.....

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      // ஃபேஸ்புக் - பொதுவாக இங்கே எனது பதிவுக்கான லிங்க் தருவதோடு சரி. நிறைய தேவையில்லாத கருத்துகள், விவாதங்கள் மட்டுமே இங்கே.//

      நான் முடிந்த மட்டும் ஃபேஸ்புக்கில் எனது வலைப்பதிவுகளை வெளியிடாமல் இருக்கவே விரும்புகிறேன். எனது பணிக்கால மற்றும் வலைப்பதிவு நண்பர்களோடு தொடர்பு கொள்ள இந்த ஃபேஸ்புக் உதவுவதால் சட்டென்று வெளியே வர யோசனையாகவே இருக்கிறது.

      // நமக்கு வலைப்பூ மட்டும் போதும்.....//

      இதுதான் எதார்த்தம் நண்பரே.

      Delete
  3. தங்கள் கவலைதான் எனக்கும்! முகநூலும், வாட்ஸ்-அப்பும் நமது நேரத்தைப் பெரிதும் திருடிக்கொண்டுபோய் விடுகின்றன.எனவே வாரம் ஒருமுறையோ அல்லது பத்து நாளைக்கு ஒருமுறையோ தான் அவற்றைப் பார்ப்பது என்று வைத்துக்கொண்டிருக்கிறேன். வாட்ஸ்-அப்பில் அந்தப் பத்து நாட்களுக்குள் ஐந்தாறு பதிவுகளுக்கு மேல் யாரும் போட்டிருந்தால் அவற்றைப் பார்க்காமலேயே delete செய்துவிடுகிறேன். நீங்களும் இதுபோல் செய்யலாம்.

    மற்றபடி, நமது வலைப்பதிவின் வசதி வேறெதிலும் வராது. முக்கியமாக, இளைஞர்கள் தமது எழுத்திற்கு மெருகூட்ட வேண்டுமானால் வலைப்பதிவில் எழுதுவதும், பிறரின் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதும்தான் சிறந்த வழி.

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா இராய.செல்லப்பா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      // நமது வலைப்பதிவின் வசதி வேறெதிலும் வராது. முக்கியமாக, இளைஞர்கள் தமது எழுத்திற்கு மெருகூட்ட வேண்டுமானால் வலைப்பதிவில் எழுதுவதும், பிறரின் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதும்தான் சிறந்த வழி. //

      என்ற தங்களின் கருத்தேதான், பெரும்பாலான வலைப்பதிவர்களின் அனைவரது கருத்தும் என்று நினைக்கிறேன்.

      Delete
  4. வாட்சப்ல, உருப்படியான விஷயங்களை பகிர்ந்துகொண்டால், நல்லதுதான். ஆனால் பெரும்பாலும் ஒரே படங்கள்/கிளிப்ஸ் திரும்பத் திரும்ப வருகின்றன. ஆனாலும், உடனடி தொடர்புக்கு வாட்சப் உபயோகமா இருக்கு.

    ஃபேஸ்புக் - நான் அதில் இல்லை. அதுனால அதைப் பற்றித் தெரியாது.

    பொதுவெளில பெரும்பாலும் உண்மை பகிர்வது கடினம். அதுனால அங்க போடற கருத்தை வைத்து யாரையும் தீர்மானிக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு நன்றி.

      //ஃபேஸ்புக் - நான் அதில் இல்லை. அதுனால அதைப் பற்றித் தெரியாது//

      அப்படியா? ஆச்சரியமாக இருக்கிறது.

      Delete
  5. நலமெலாம் பெருகட்டும்!..
    நன்மையெல்லாம் சூழட்டும்!..

    அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி செல்வராஜூ அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.

      Delete
  6. //சில புரட்சிகரமான குழுவினர், மற்ற பொதுவான குழுக்களிலும் ஊடுருவி, இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார்கள் என்பதுதான். இவர்களுடைய வேலை எந்த அரசாங்கமாக இருந்தாலும் எதிர்ப்பதுதான். எனவே இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் எதிர்கால நலன் கருதி கவனமாக இருப்பது நல்லது.// முழுக்க முழுக்க உண்மை! இளைஞர்கள் மட்டுமின்றி அவர்கள் பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எந்த அரசாக இருந்தாலும் அதை எதிர்ப்பதே இவர்கள் கொள்கை! :(

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  7. எதிலும் ஓர் அளவோடு இருந்துவிட்டால் நல்லதே! நாங்க முக்கியமா எங்கள் குழந்தைகளோடு தொடர்பு கொள்ளவே வாட்ஸப் வைச்சிருக்கோம். உடனடியாகத் தகவல் பரிமாற்றம் செய்துக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். நானும் வாட்ஸ்அப், பேஸ்புக் இரண்டையும் நண்பர்களுடனான தொடர்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன்.

      Delete
  8. உங்கள் எழுத்துக்கள் அனைத்தையும் நானும் ஏற்றுக் கொள்கிறேன்...

    ///நான் முதலிடம் தருவது வலைத்தளத்திற்கு மட்டுமே.
    //
    இதை நானும் படுபயங்கரமாக ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. உங்கள் கருத்துகள் அனைத்தும் சரியே!!

    //சில புரட்சிகரமான குழுவினர், மற்ற பொதுவான குழுக்களிலும் ஊடுருவி, இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார்கள் என்பதுதான். இவர்களுடைய வேலை எந்த அரசாங்கமாக இருந்தாலும் எதிர்ப்பதுதான். எனவே இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் எதிர்கால நலன் கருதி கவனமாக இருப்பது நல்லது.// மிக மிக சரி...

    நான் ஃபேஸ்புக்கில் இல்லை. வாட்சப்பில் இருந்தாலும்...குழுக்கள் பலவற்றிலிருந்தும் நீங்கிவிட்டேன். ஃபோன் ஹேங்க் ஆவதால். நான் இருக்கும் குழுக்கள் அதிகம் எதுவும் ஷேர் செய்வதில்லை. தனிப்பட்ட நபர்களும் அதிகம் ஷேர் செய்வதில்லை. வெளிநாட்டில் இருக்கும் நெருங்கிய உறவினர்களுடன் பேசவும் செய்திகள் பகிரவும் வாட்சப் மிக உதவியாக இருக்கு என்றால் மிகையல்ல...

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் எல்லா டெக்னாலஜி வளர்ச்சியையும் அளவாகப் பயன்படுத்தினால் நல்லதே..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி, மேடம்.

      Delete
  10. நம் நேரத்தை திருடும் திருடர்கள் போல முகநூலும், வாட்ஸ் ஆப்பும்..நானும் முகநூல் பக்கம் போய் பலகாலம் ஆகிறது..புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. அன்பர் புதுச்சேரி கலியபெருமாள் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. இரண்டிலும் நல்லதும் கேட்டதும் இருக்கிறது.. அதன் அளவு நாம் உபயோகப்படுத்தும் முறையும் அளவும் பொறுத்ததே சார்.. நான் எப்பொழுதும் வலைப்பக்கம் தான்.. பதிவை பகிரத்தான் பேஸ்புக் வாட்ஸாப் பயன்படுத்துவேன் நான்.. நல்ல பகிர்வு சார்.. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யுவராணி தமிழரசன் அவர்களின் பாராட்டினுக்கும் புத்தாண்டு வாழ்த்தினுக்கும் நன்றி

      Delete
  12. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  13. நான் வாட்ஸாப்பில் இல்லை .இதை பலர் நம்பவில்லை :) ஊருக்கு தங்கச்சி கிட்ட பேச கூட கார்ட்ஸ் தான் யூஸ்பண்றேன் .முகப்புத்தகம் பிப்ரவரி 2017 வெளிவந்தேன் அங்கிருந்து .இங்கே வலைப்பூக்களை வாசித்து கருத்திட நேரம் சரியா இருக்கு சந்தோஷமாவும் இருக்கு ..

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா .

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களது கருத்தினுக்கு நன்றி.

      Delete
  14. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.எதையும் அளவோடும் முறையாகவும் உபயோகித்தால் பலனுடயதாக இருக்கும். பொறுப்பற்ற பயனாளிகள்தான் whatsapp facebook ஆகியவற்றை பலனற செய்கின்றனர். உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன் .
    Whatsapp is very ueful on an individual basis for vocie calls and texting - both cost effective and free of distances (Local/STD/ISD) and virtually online - real time texting as well as store and forward.
    In addition to your views on FaceBook, I consider it also risky of identity theft and vulnerable to manipulations by undesirable elements- பாபு

    ReplyDelete
  15. முற்றும் உண்மை! ஆங்கிலப் பத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி.

      Delete
  16. நல்ல பதிவு தோழர். சில வாட்ஸ்அப் குழுவிலிருந்து விலகினாலும் மீண்டும் சேர்த்து விடுகிறார்கள். முகநூலில் பலரும் தனது விபரத்தை பதியாமல் இருப்பதால் நூற்றுக்கணக்கான நண்பர்கள் காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கவிமதி சோலச்சி புதுக்கோட்டை அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  17. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். எனது பதிவிற்கு வந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லியதற்கு நன்றி.

    ReplyDelete
  19. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  20. வாட்ஸ்அப்பை விட முகநூல் மேல்...

    2018 பல வெற்றிகளைத் தருமென நம்புவோம்.
    எல்லோருக்கும்
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

      // வாட்ஸ்அப்பை விட முகநூல் மேல்... //

      நானும் இந்த கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் அய்யா.

      Delete
  21. மிக சரியா சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் கணிப்பு சரி
    தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  23. அருமையாகக் கூறியுள்ளீர்கள். பேஸ்புக், வாட்ஸ்அப்பில் இருக்கும்போதிலும் முக்கியத்துவம் தருவது வலைப்பூவிற்கே.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி.

      Delete
  24. வாட்ஸ்அப் பேஸ்புக் ஆகிய இரண்டுமே நம்முடைய நேரம் பாட்டரி லைஃப் மறறும் கண்களின் ஆரோக்கியம் போன்றவற்றை கபளீகரம் செய்வதில் முன்னிலை வகிக்கின்றன. செய்திகள் திரும்பத் திரும்ப வெட்டி ஒட்டப்படுகின்றன. காலை மாலை இரவு வணக்கங்களைப் பார்த்து எரிச்சலதான் வருகிறது. சோஷியல் மீடியாவை பயனுள்ள வழிகளில் பயன்படுத்துவதில் நமக்கு இன்னும் அதிகப் பொறுப்பு தேவையோ? பயனுள்ள தகவலைப் பகிர்வதில் முனைப்பு குறைகிறதோ? சிந்தனையைத் தூண்டியுள்ளீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பர் ஆர்.முத்துசாமி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      // சோஷியல் மீடியாவை பயனுள்ள வழிகளில் பயன்படுத்துவதில் நமக்கு இன்னும் அதிகப் பொறுப்பு தேவையோ? பயனுள்ள தகவலைப் பகிர்வதில் முனைப்பு குறைகிறதோ? //

      நீங்கள் சொல்வது சரிதான். இன்னும் குழு மனப்பான்மைதான் இருக்கிறது.

      Delete
  25. I don't have Facebook but I comment in others w/o sending request. That is, if it's open for all. It helps me spread my views across and show where others go wrong. I believe it's my conscientious responsibility as a citizen to question poisonous thoughts. Badri Seshadri FB is ideal. He gives freedom whereas many have shown the door. Your rejection of FB is premature. Take it seriously and we've a role to play in containing evil thoughts to spread across.

    ReplyDelete
    Replies
    1. FB is two kinds: personal where you restrict and general which needs to be kept open. It's like a train journey. Travelers share views and news. I don't know why you want to know the profile of persons talking to you? Unless fellow travelers reveal themselves we don't bother about their backgrounds. In general compartment even a cucumber seller joined discussions about the actor. I traveled in such coach from a to Chennai yesterday. Perfect equality among debaters. Please read Badriseshadri FB and be like him in accommodating all w/o any inhihibition because 'all things great and small, Lord God made us all'

      Delete
    2. கருத்துரை தந்த திரு விநாயகம் அவர்களுக்கு நன்றி.

      // I don't know why you want to know the profile of persons talking to you? Unless fellow travelers reveal themselves we don't bother about their backgrounds. //

      உங்களது இந்த கேள்வி நியாயமானதுதான். எனது இந்த பதிவினில்.

      // காலம் இருக்கும் இருப்பில், எனக்கு எந்த விதத்திலும் அறிமுகம் இல்லாத அல்லது தன்விவரம் (PROFILE) சரியாகச் சொல்லாத அல்லது ஒரு சில அடிப்படை விவரங்கள் கூட தர விரும்பாத - அன்பர்களின் Friend Request ஐ எவ்வாறு ஏற்றுக் கொள்வது அல்லது அல்லது அவர்களைத் தொடர்வது என்று தெரியவில்லை. //

      என்று சொல்லி இருக்கிறேன். இதில் ‘காலம் இருக்கும் இருப்பில்’ என்று நான் குறிப்பிடுவது, இன்று அடிக்கடி போடப்படும் அவதூறு சட்டம் குறித்துதான். யாராவது எதையாவது வில்லங்கமாக, நமது பதிவினில் பின்னூட்டமாக எழுதவோ அல்லது பகிர்ந்து கொண்டால் இந்த சட்டப்படி வலைத்தள நிர்வாகி ( Admin ) என்ற முறையில் நாம் தான் முன்னிற்க வேண்டி உள்ளது. அதேசமயம், தன்விவரம் (PROFILE) உள்ளவர்களால் இது போன்ற நெருக்கடிகள் அதிகம் வர வாய்ப்பில்லை. அப்படியே வந்தாலும் சட்டப்படி எதிர் கொள்ளுவதில் நமக்கு பாதிப்பில்லை என்று நினைக்கிறேன்.

      Delete