Thursday 8 March 2012

கரிச்சான் குஞ்சு - ”பசித்த மானிடம்”

மின்சாரம், பஸ், டெலிபோன், தார்ச் சாலைகள் அவ்வளவாக இல்லாத காலம். எதற்கெடுத்தாலும் சைக்கிள், மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டி சவாரி, ரயில் அல்லது நடைப் பயணம் என்று இருந்த நேரம். பஸ் போக்குவரத்து என்பது மிகவும் குறைவு. கடிதப் போக்குவரத்து மட்டுமே. இந்தியா சுதந்திரம் வாங்காத நேரம். இந்த கால கட்டத்தில், கதை முழுக்க முழுக்க கும்பகோணம் பக்கம் உள்ள தோப்பூர் கிராமத்து  அக்ரகாரத்தில் தொடங்குகிறது.

மாவட்ட மைய நூலகத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் இந்த நாவலை வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்தேன். நாவலின் போக்கு என்னை அப்படியே அந்த காலத்திற்கு இழுத்துச் சென்று விட்டது. ரசித்துப் படித்து முடித்தேன். நூலகத்தில் திருப்பித் தந்த பின்னர், நாவலை விலைக்கு வாங்க புத்தக கடைகள் சென்று கேட்டால் இல்லை. அதன்  பின்னர் அந்த நாவலை இரண்டாம் முறை படிக்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. இப்போது பதினைந்து நாட்களுக்கு முன்னர் நூலகம் சென்றபோது அந்த நாவல் கிடைத்தது. அப்போது இந்த நாவலை வெளியிட்ட பதிப்பகம் வேறு என்று ஞாபகம். இப்போது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட அந்த புதிய பதிப்பை கடைகளில் விசாரித்து வாங்கி விட்டேன். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இரண்டாவது தடவை படித்து முடிக்கும் போதும் அதே ரசனை மங்கவில்லை.

கதை என்பது கணேசன், கிட்டா என்ற இரு பிராமண மனுசாள் கதை. தோப்பூரைச் சேர்ந்த கணேசன் என்பவன் சத்திரத்தில் சிறு வயதிலேயே எடுபிடி  வேலைக்குச் சேர்ந்து பின்னர் படிக்க வேண்டும் என்ற ஆசையில் வெளியேறுகிறான். மகா யோக்கியனாக இருந்த அவன் சந்தர்ப்ப வசத்தால் கெட்டு குட்டிச் சுவராக தொழுநோயாளியாகி தத்துவ ஞானியாகிறான். அவன் ஊர் ஊராக நடையாய் நடந்து திரிகிறான். அவன் பயணம் செய்யும் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப் பள்ளி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், மாம்பழச் சாலை என்று அந்த காலத்து மனிதர்கள் வருகிறார்கள். கிட்டா என்பவன், தோப்பூரில் நிலம் நீச்சாக வாழ்ந்தவன். ஒரு கால கட்டத்தில் விவசாயம் பார்க்க முடியாத சூழ் நிலையில், பல தஞ்சாவூர் பிராமணர்களைப் போல நிலங்களை விற்றுவிடுகிறான். அதன் பிறகு சொந்தமாக டாக்ஸி, மருந்து கடை வியாபாரம் என்று  முன்னேறிய  குடும்பஸ்தன். மனைவியின் அக்காள் தொடுப்பால் இவன் படும் அவஸ்தைகள், பிள்ளைகளின் பிரச்சினைகள் என்று நாவல் தொடர்ந்து செல்கிறது.

அந்தகாலத்து தோப்பூர் அக்ரகாரம், கும்பகோணத்து தர்ம சத்திர சாப்பாடு, அரசலாற்றங்கரை, தர்ம ஆஸ்பத்திரி, அன்றைய பிராமணாள் காபி கிளப் என்று இயல்பான சமூக வாழ்க்கை பற்றிய விவரங்கள் என்று ஓட்டமும் நடையுமாக நாவல் போகிறது. தோப்பூர் அக்ரகாரத்தை விவரித்துச் சொல்லும்போது அப்போதைய பிராமணர்களின் நிலைமை, நிறையபேர் வெளியூருக்கு சென்று விட்ட படியினால் ஊரில் பாதி பாழ் மனைகள், வீடுகள், குத்தகைகாரர்களைச் சமாளிக்க முடியாமல் நிலங்களை விற்று ரொக்கமாக மாற்றிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறுதல், மைனர் வாழ்க்கை நடத்தி வாழ்ந்து கெட்ட சந்த்ரு என்று காட்சிகள் வருகின்றன. ஆவணி அவிட்டம் அன்று கணேசனுக்கு நடைபெறும் கிராமத்து பூணூல் கல்யாணம் மறக்க முடியாத ஒன்று. 

 
நாவலாசிரியர் அந்த காலத்து வடமொழி பயின்ற தமிழாசிரியர். கரிச்சான் குஞ்சு என்ற ஆர். நாராயணசாமி. தஞ்சை மாவட்டம் நன்னிலம் தாலுகாவைச் சேர்ந்த சேதனீபுரம் இவரது ஊர். சாஸ்திரிகள் குடும்பம். இதனால் நாவல் முழுக்க தஞ்சை பிராமணர்களின் மண் மணம் வீசுகிறது. தி.ஜானகிராமன் மற்றும் கு.ப.ரா ஆகியோரது நாவல்களை ரசிப்பவர்களுக்கு கரிச்சான் குஞ்சுவின் இந்த “பசித்த மானிடம்நிச்சயம் பிடிக்கும். மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை பசி தாகம்தான். சாப்பிட சாப்பிட பசிதான். தாகம் தீரத் தீர குடித்தாலும் தாகம்தான். வயிற்றுப் பசி, காமப் பசி, பணப் பசி, புகழ் பசி என்று. முடிவே இல்லை. இறுதியில் மிஞ்சுவது எதுவுமே இல்லை. இதனை மையக் கருத்தாகக் கொண்ட  இந்த  நூலானது , நாவல் இலக்கியப் பசி நிறைந்தவர்களுக்கு ஒரு புதையல்.

நூலின்பெயர்:பசித்த மானிடம்       
ஆசிரியர்    : கரிச்சான் குஞ்சு
வெளியீடு   :காலச்சுவடு பதிப்பகம்
விலை      : ரூ 200





11 comments:

  1. நான் படித்ததில்லை.படிக்கும் ஆசையைத் தூண்டும் பகிர்வு.

    ReplyDelete
  2. Reply to //...சென்னை பித்தன் said..//

    வணக்கம்! பழைய அனுபவங்களையும் புதிய உத்தியில் வலைப் பதிவில் தரும் சென்னைப் பித்தன் அவர்களே, இந்த “ பசித்த மானிடம் ” நாவலை ஒரு முறை படித்துப் பாருங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  3. ஒரு நல்ல படைப்பை மிக அழகாக
    அறிமுகம் செய்துள்ளீர்களிந்த மாதப் பட்டியலில்
    அந்த நூலைச் சேர்த்துள்ளேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Reply to //...Ramani said... //

    வணக்கம் கவிஞர் ரமணி அவர்களே! நீங்களும் வீட்டு நூலகத்திற்கான புத்தகங்கள் வாங்குதல் மற்றும் நிரம்ப படிக்கும் பழக்கம் உள்ளவர் எனத் தெரிகிறது. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  5. ஒரு நூலில் தாங்கள் ரஸித்த வரிகளை மிகவும் அழகாக நாங்களும் வாங்கவேண்டும், அதைப்படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக எழுதியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    இன்று என் வலைப்பதிவிற்கு முதல் வருகை தந்து வாழ்த்தியுள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி. நன்றி.

    அன்புடன்
    வை கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
  6. Reply to // …வை.கோபாலகிருஷ்ணன் said...//
    வணக்கம்! உங்கள் வருகைக்கும், மேலான கருத்துரைக்கும், பாராட்டுக்கும் நன்றி!

    ReplyDelete
  7. இறுதியில் மிஞ்சுவது எதுவுமே இல்லை. இதனை மையக் கருத்தாகக் கொண்ட இந்த நூலானது , நாவல் இலக்கியப் பசி நிறைந்தவர்களுக்கு ஒரு புதையல்.

    புதையல் அறிமுகத்திற்கு நன்றிகள்..

    ReplyDelete
  8. Reply to …..// இராஜராஜேஸ்வரி said...//

    வணக்கம்! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  9. அங்கு வை.கோ.சார் பதிவில் பார்த்து இங்கு வந்து படித்து, வாசித்ததை உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தும் உங்கள் ரசனை ஆற்றலை ரசித்தேன்.

    'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' நூலையும் வாசித்து முடித்த பின் நீங்கள் உணர்ந்த உங்கள் வாசிப்பு அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள எழுத்தாளர் ஜீவி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. வெகு விரைவில் உங்கள் நூலைப் பற்றிய அடியேனது பார்வை வெளிவரும்.

      Delete
    2. ஏற்றுக் கொண்ட பணிக்கு நன்றி, ஐயா

      Delete